Monday, February 16, 2009

புரட்சி நாளை காலை எட்டரை மணிக்கு வருது

ஊரே பரபரப்பாக இருக்கின்றது, எந்த பக்கம் திரும்பினாலும் புரட்சி பற்றிதான் பேச்சே, தினசரி, வார மாத பத்திரிக்கையில் எல்லாம் புரட்சி வருவதை பற்றி தான் பேச்சே புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றது...

ஆமா "சுதந்திரம்" வந்து எல்லாத்தையும் புடுங்கிடுச்சி, மீதியை புரட்சி வந்து தாம் புடுங்கப்போவுது சலித்துக்கொண்டார் டீக்கடை பாய்


சுதந்திரம் வந்து என்ன புரட்சி வந்து என்ன? எல்லாம் பணம் இருக்கிறவனுக்கு தாம்பா, நம்மளை மாதிரி ஏழைபாழைங்களுக்கு உழைச்சாதான் அரை வயிறு தின்னலாம், போப்பா போயி வேலையைப்பாருங்கப்பா கும்பலாக புரட்சி வருவதை பற்றி பேசிக்கொண்டிருந்த சிவப்பு சட்டை போட்ட "போர்ட்டர்" தோழர்களை விரட்டிக்கொண்டிருந்தார் ஹெ.எம்.எஸ் கோபால்


அரசியல் தலைவர்களிலும் கூட புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் அறிக்கைகள் விடப்பட்டுக்கொண்டிருந்தது


புரட்சி வருவதை யாராலும் தடுக்க முடியாது - திமுக தலைவர் உதயநிதி அறிவிப்பு

புரட்சியை ஆதரித்தால் தமிழ்நாடு உருப்படாது, புரட்சியை எதிர்த்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி அறிக்கை

புரட்சியை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை, - மாதிமுக(மாறன் திமுக) தலைவர்

நாங்கள் வித்தியாசமானவர்கள், மதுரைக்கு வடக்கே புரட்சிக்கு ஆதரவும் மதுரைக்கே தெற்கே எதிர்ப்பும் தெரிவிப்போம் மதுரையில் ஆதரவோ எதிர்ப்போ செய்யமாட்டோம், இளைய புரட்சி கலைஞர் பிரபாகரன் தலைமையை ஏற்கும் வரை நான் தேமுதிக வின் தலைமை பொறுப்பில் இருப்பேன், இளைய புரட்சி கலைஞர் பிரபாகரன் அவர்கள் தலைமை ஏற்கும் நாளுக்காக காத்திருக்கிறோம், அதன் பின் ஒரு தொண்டனாக தேமுதிகவில் தொடருவேன் - தேமுதிக தலைவர்(பொறுப்பு) சுதீஷ் பரபரப்பு பேட்டி


புரட்சி பற்றி முடிவு செய்ய புரட்சித்தலைவியின் ஆணைக்காக காத்திருக்கின்றோம், புரட்சி தலைவி கனவில் வந்து ஆணையிட தயாராக இன்றிலிருந்து புரட்சி வரும் நாள் வரை தூங்கப்போகிறோம், புரட்சி தலைவர் நாமம் வாழ்க, புரட்சி தலைவி புகழ் ஓங்குக - அதிமுக பொதுச்செயலாளர் ஏகாம்பரம் பேட்டி

புரட்சி உழைக்கும் மக்களை சுரண்டும் பொறுக்கிகளின் கொண்டாட்டம், உழைக்கும் மக்களை உடனடி பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் செயலே புரட்சி இதோ வருது புரட்சி அதோ வருது என்கிற நாடகம், புரட்சி வருது வருது என்று இத்தனை நாட்களாக மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள் புரட்சியை ஆதரிக்கும் தரகு முதலாளிகள் - தோழர் கிச்சா என்கிற கிருஷ்ண மூர்த்தி அய்யங்கார் - ம க இ க செயலாளர் - புதிய ஜனநாயகம் பத்திரிக்கையில் வெளியிட்ட அறிக்கை தோழர் "தீவிர அசுரனின்" வலைப்பதிவில்...


கரகம், காவடி மேள தாளங்களோடு பீர் விஸ்கி கைகளோடு புரட்சியை வரவேற்க ஊர் எல்லையிலேயே காத்திருந்தார்கள் இளைஞர்கள்....

"ஏம்பா கி.பி. 2000த்துலயே ஒரு புரட்சி வந்து ஊத்திக்கிச்சாமே தெரியுமா?"

"ஆமாம் நானும் கேள்விப்பட்டேன், நெட்ல கூட அது டீட்டெய்ல்ஸ் தேடினேன், 2000ல புரட்சி வந்ததுன்னு தகவல் இருக்கு ஆனா அதுக்கு மேல வேற ஒண்ணும் தகவல் இல்லை"

"ரொம்ப வருசம் கழிச்சி இந்த புரட்சி வந்திருக்கு, ஏற்கனவே சுதந்திரம் ஊத்திக்கிச்சி, இந்த புரட்சியும் ஊத்திக்கிச்சினா அவ்ளோதான் நம்ம கனவெல்லாம் வீணாயிடும்"

ஏய் புரட்சி வந்துருச்சி புரட்சி வந்துருச்சி, கத்திக்கொண்டே அந்த காரை நோக்கி ஓடினார்கள் இளைஞர்கள்....

தாரை தப்பட்டை முழங்க காரை சுற்றி சுற்றி வந்தார்கள்...

முகத்தை தொங்க போட்டபடி இறங்கினார் ....

எல்லோரிடமும் அப்போது ஒரே கேள்வி தான் புரட்சி வந்துருச்சா?? ஒரு வேளை முதலாளி புரட்சி வராம இருக்க சதி செய்துட்டாரா?, அவருக்கு புரட்சி வருவதில் விருப்பமேயில்லை, அவர் பையன் தான் புரட்சி வரவைக்க ஆர்வமாக இருந்தார்...

"அண்ணே புரட்சி வந்துருச்சா? "

"அட என்னப்பா திடீர்னு கூட 50 லட்சம் கூட குடுத்தாதான் புரட்சியை கொடுப்பேன்னு சொல்றானுங்க, அதான் பணம் பொறட்டிக்கிட்டு போக வந்துருக்கேன், பயப்படாதிங்க நாளைக்கு காலையில எட்டரை மணிக்குள்ள புரட்சி வந்துடும்"

புரட்சி - சென்ற மாதம் தான் அறுபதாம் கல்யாணம் செய்த சூப்பர் ஸ்டார் "விஜய்" - பழம் பெரும் நடிகை ஸ்ரேயாவின் பேத்தி சுரேயா நடிக்க 200 கோடி ரூபாய் செலவில் தயாரான தமிழ் திரைப்படம்

நன்றி குழலி 

வி.பி. சிங்கை இழிவுபடுத்தும் 'புதிய ஜனநாயகம்'

விடுதலை இராசேந்திரன்

'மக்கள் கலை இலக்கியக் கழக'த்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழமை சக்தியாகவே கருதுகிறோம். களப் பணிகளில் பல்வேறு சூழல்களில் கரம் கோர்த்து நிற்கும் இயல்பான சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் இரு சக்திகளும் கரம் கோர்த்தே களமிறங்கி வருகின்றன. குறிப்பாக 'இந்து' எதிர்ப்பு; பார்ப்பன எதிர்ப்பு என்ற கோட்பாடுகள் - இரு அணியின் தோழர்களையும் நெருக்கமாக்கியுள்ளன. ஆனாலும்கூட அண்மையில் அவர்களின் 'புதிய ஜனநாயகம்' ஏட்டில் வி.பி.சிங் பற்றி வெளிவந்த ஒருகட்டுரை - 'புதிய ஜனநாயகத்தின்' பார்ப்பன எதிர்ப்புப் பற்றிய பல்வேறு அய்யங்களை எழுப்பியிருப்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.

'காக்கை குயிலாகாது; பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்து மதவெறியர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அக்கட்டுரை, வி.பி.சிங்கைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது. குஜராத் மோடி அளவில் வி.பி.சிங்கைக் கொண்டு வந்து நிறுத்தி, "குற்ற"ப் பட்டியல்களை அடுக்கியிருக்கிறது. பச்சைப் பார்ப்பனியப் பார்வையில் வெளிவந்திருக்கும் அக்கட்டுரை 'துக்ளக் சோ', 'சு.சாமி' கும்பலை நிச்சயமாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கும். 'பொதுவுடைமை கட்சிகளில் மீண்டும் தமது குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது' என்று "அவாள்"கள் கருதினால், அதில் தவறு இல்லை என்பதே நமது கருத்து.

இந்திய அரசியலில் பார்ப்பனர்கள் மற்றும் 'அவாள்' ஊடகங்களின் கடுமையான வெறுப்புக்குரிய மனிதர் தான் வி.பி.சிங். அவரின் மரணம் கூட ஊடகங்களால் 'இருட்டடிப்பு' செய்யப்பட்டன. தங்களின் வஞ்சகத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்; அவரது மறைவையொட்டி சிறப்புக் கட்டுரைகள் எதையும் எந்த பார்ப்பன தேசிய ஏடும் வெளியிடவில்லை. பார்ப்பனர்கள் 'கள்ள மவுனத்தால்' வி.பி.சிங்கை அவமதித்தார்கள் என்றால் 'புதிய ஜனநாயகம்' பததிரிகையோ வெளிப்படையாகவே தமது அவமதிப்புகளைப் பதிவு செய்து, அதில் மகிழ்ச்சி அடைகிறது.

காங்கிரஸ் அரசியலில் பொது வாழ்க்கையைத் தொடங்கிய வி.பி.சிங், பிறகு காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலுக்கு வந்தார் என்பது வரலாறு; தமது சொந்த நிலங்களை 'பூமி தான' இயக்கத்துக்கு வழங்கினார். அமைச்சர் பதவிகளை வகித்தார். ஆனால், வி.பி.சிங்கின் பொது வாழ்க்கை காங்கிரஸ் அரசியலில் முடங்கிக் கிடந்தபோது, காங்கிரஸ் இழைத்த தவறுகளையெல்லாம் பட்டியலிட்டு அதை வி.பி.சிங் மீது சுமத்தி, அவற்றையெல்லாம் எதிர்த்தாரா என்று 'புதிய ஜனநாயகம்' கேள்வி எழுப்புவது - அதன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறதே தவிர, நேர்மையான சமூகப் பார்வையை அல்ல. காங்கிரஸ் அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்காமல், அதன் சுயரூபத்தை அறிந்து வெளியேறி - காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தொடங்கியதுதான் வி.பி.சிங்கின் சிறப்பு.

'இரண்டு அரசியலிலும் எங்களுக்கு உடன்பாடில்லை; நாங்கள் மூன்றாவது அரசியல் அணி' என்பது 'புதிய ஜனநாயகத்தின்' கொள்கையாக இருக்கலாம். அந்தக் கொள்கைக்கு வந்து சேராத எவருமே 'கடைந்தெடுத்த அயோக்கியர்கள்' தான் என்ற நிலைப்பாட்டில் எழுதுவதும் - பேசுவதும் கட்சி வாதமாகத்தான் இருக்க முடியும். லட்சியவாதிகள் - கட்சிவாதிகளாக முழுமையாக மாறி நிற்பது மக்களை அணி திரட்டுவதற்கு - ஒரு போதும் பயன்படாது. அவர்களின் சுயதிருப்திக்குத்தான் தீனி போடும்.

வி.பி.சிங் பிறப்பித்த பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டு ஆணையை சில அரசு பதவிகளுக்கான சலுகைகளாக உண்மையான பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையாளர்கள் எவரும் சுருக்கிப் பார்த்து விட முடியாது. மாறாக இந்திய அரசியலில் அதிரடி மாற்றங்களை உருவாக்கிய நடவடிக்கை அது. பார்ப்பன அரசியல் தலைமையைப் புரட்டிப் போட்டு, பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை அணி திரட்டலுக்கு வழியமைத்து அவர்கள் தேர்தல் அரசியலை நிர்ணயிக்கும் செல்வாக்கு மிக்க சக்திகளாக்கிய மாற்றத்தை அந்த ஆணை தான் கொண்டு வந்தது.

பார்ப்பனர்களுக்கு வி.பி.சிங் மீது எழுந்த கடும் கோபத்துக்கு இதுவே அடிப்படை. பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல, அதுவரை பார்ப்பன மேலாதிக்கம் - சாதியமைப்புகளைக் கவனத்திலே எடுக்காமல், வர்க்கக் கண்ணோட்டத்தில் 'புதிய ஜனநாயக'ப் புரட்சிகளைப் பேசி வந்த பொதுவுடைமை கட்சிகளும், இதனால் நெருக்கடிக்கு உள்ளாயின என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை. தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தத்தை இந்த மனிதன் உருவாக்கி விட்டானே என்ற ஆவேசத்தை - தங்களது அடி உள்ளத்தில் புதைத்து வைத்திருந்தவர்கள்தான் வி.பி.சிங்கை அவர் மறைவிலும் கொச்சைப்படுத்தத் துடிப்பவர்களாக இருக்கிறார்கள். மாறாக, சரியான சமூகப் பார்வைக்கு 'மண்டலாக்கம்' வெளிச்சம் தந்தது என்று கருதுவோர், வி.பி.சிங்கின் பங்களிப்புக்கு ஏற்பு வழங்கி பாராட்டுவார்கள்.

'புதிய ஜனநாயகத்தின்' இந்தக் கட்டுரை மண்டலாக்கத்தால் பதறிப் போன பார்ப்பனர்கள் பக்கம் அது நிற்பதையே உணர்த்துகிறது.

1989 இல் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்த போது, "அதை நாங்கள் எதிர்க்கவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை" என்று எழுதிய 'புதிய ஜனநாயகம்' "மண்டல் குழு பரிந்துரை அமலாக்கமும் எதிர்ப்பும் அரசியல் பயன்களை அடைவதற்காக மேல்சாதிகளுக்கிடையே நடக்கும் மோதல் சண்டை" என்றும் எழுதியது. ('புதிய ஜனநாயகம் - மார்ச், 2003) வி.பி.சிங் நாட்டை சாதிவாரியாகக் கூறு போட்டுவிட்டார் என்று 'அருண்சோரி'களும், 'சோ'க்களும், பார்ப்பனர்களும் ஏதோ, சாதியமைப்பையே வி.பி.சிங் தான் உருவாக்கியது போலக் கூப்பாடு போட்டார்கள். அதே பார்ப்பன குரலைத்தான் 'புதிய ஜனநாயகம்' அன்று இவ்வாறு ஒலித்தது. "நம்புங்கள்; இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதைத் தவிர, நாடு ஒரு உள்நாட்டுப் போரில் மூழ்கிப் போய்விட்டது, சாதிப்போர், மதப்போர், இனப் போராக." (புதிய ஜனநாயகம், அக்.16, 1990)

மண்டல் குழு பரிந்துரையை எதிர்த்து நாடு முழுதும் கலவரத்தை உருவாக்கிய பார்ப்பன சக்திகளைக் கண்டித்து, ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்க வேண்டிய 'புதிய ஜனநாயகம்' அதைச் செய்யவில்லை. மாறாக - இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களையும் சேர்த்தே குற்றவாளியாக்கியது.

"இடஒதுக்கீட்டை ஆதரித்தும் எதிர்த்தும் சாதி அடிப்படையிலும், அயோத்தி விவகாரத்தில் மத அடிப்படையிலும் நடக்கும் கோரக் கொலைகள், வன்முறை வெறியாட்டங்கள் மனசாட்சியுடைய அனைவரையும் வெறுப்பும், அதிருப்தியும் அடைய வைக்கின்றன" என்று எழுதியதோடு "அரசு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மேல்சாதி மேட்டுக் குடியினரிடையே நடக்கும் சாதிச் சண்டைகளை அம்பலப்படுத்தி முறியடிப்போம்" என்று அறைகூவலும் விடுத்தது.

வி.பி.சிங் ஆட்சியின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பார்ப்பன சக்திகள் தொடர்ந்த வழக்கில், பல்வேறு நிபந்தனைகளுடன் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீhப்பளித்தபோது, 'புதிய ஜனநாயகம்' இவ்வாறு எழுதியது. "இடஒதுக்கீடு ஆதரவும் சரி; எதிர்ப்பும் சரி; தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் உட்பட சகல பிரிவு உழைக்கும் மக்களையும் அடக்கி ஒடுக்கிச் சுரண்டும் தரகு அதிகார முதலாளிகள், நிலப் பிரபுக்களுக்குச் சேவை செய்யும் அரசு எந்திரத்தில் பதவி - இடம் பிடிப்பதற்கான போட்டா போட்டியும் - நாய்ச் சண்டையும் தான் இந்த அப்பட்டமான உண்மை இப்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று எழுதியது ('புதிய ஜனநாயகம் 1993 - செப். 16-31, அக் 1-15)

ம.க.இ.க.வின் அரசியல் அமைப்பான இந்தியப் பொதுவுடைமை கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) அதிகாரப்பூர்வ ஏடான "புரட்சிப் புயல்", "இடஒதுக்கீடு கொள்கை மக்கள் சாதிகளாகப் பிரிந்திருப்பதை சாசுவதமாக்குகிறது" என்று எழுதி, பார்ப்பனர்களின் நிலைப்பாட்டையே தனது கொள்கை என்று அறிவித்திருந்தது. ('புரட்சிப் புயல்' - 1985 டிசம்பர்)

"ஒரு அரசியல் தலைவரை - எந்த வர்க்கத்துக்கு சேவை செய்தார் என மதிப்பீடு செய்யாமல், தனி மனிதப் பண்புகளையும், ஒரு சில சீர்திருத்த அறிவிப்புகளையும் மட்டும் வைத்து மதிப்பீடு செய்து, துதிப்பாடி போற்றுவது என்பது இன்னொரு மோசடியே" என்று, எழுதும் 'புதிய ஜனநாயக'த்தைப் பார்த்து, நாம் கேட்க விரும்புவதெல்லாம் இதுதான். அரசியல் தலைவருக்கு பொருந்தக்கூடிய இலக்கணம் அரசியல் கட்சிக்கும் பொருந்தக் கூடியது தானே; அப்படியானால் 'புதிய ஜனநாயகம்' இடஒதுக்கீட்டில் மேற்கொண்ட நிலைப்பாடு எந்த வர்க்கத்துக்கு சேவை செய்வதாகும் என்ற கேள்வியைத்தான் நாம் திருப்பிக் கேட்க விரும்புகிறோம். இடஒதுக்கீட்டில் கண்டிப்பான எதிர்நிலை எடுத்திருந்த புரட்சிகரக் குழுக்களை எல்லாம் வி.பி.சிங்கின் ஆணை நெருக்கடிக்குள்ளாக்கி விட்டதன் சீற்றத்தை 'புதிய ஜனநாயக'த்தின் கட்டுரையிலும் பார்க்கிறோம்.

போபர்சு பீரங்கி ஊழலில் ராஜீவ்காந்தியோடு சமரசம் செய்து கொள்ள மறுத்ததால் காங்கிரசை விட்டு வெளியேறினார் வி.பி.சிங் என்ற உண்மையை 'புதிய ஜனநாயகம்' மறைத்து - "கறைபடாதவர் என போற்றப்படும் இவர் போபோர்சு பீரங்கி விவகாரத்தில் வெளியேறி ஜனமோர்ச்சா எனும் கட்சியை உருவாக்கினார்" என்று எழுதுகிறது. கறைபடாதவராக இருந்த காரணத்தினால் தானே வெளியேறினார்?

போபோர்ஸ் ஊழலை அதிகாரத்தைப் பயன்படுத்தி மூடி மறைக்க முயன்றார் ராஜீவ். வி.பி.சிங் அதிகாரத்துக்கு வந்த பிறகு தான் பல தடைகளைக் கடந்து 'முதல் தகவல் அறிக்கையே' பதிவு செய்யும் நிலை உருவானது என்பதை எல்லாம் மறைத்து, குற்றவாளி ராஜீவ் கும்பலை தண்டிக்கவோ, விசாரிக்கவோ இல்லை என்று எழுதுவது பொறுப்புள்ள விமர்சனமாகுமா? 27 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து, வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ராமன் ரதயாத்திரையைத் தொடங்கினார் அத்வானி. பீகாரில் யாத்திரை தடை செய்யப்பட்ட நிலையில், வி.பி.சிங் ஆட்சிக்கு பா.ஜ.க. ஆதரவைத் திரும்பப் பெற்ற வரலாறுகளையெல்லாம் மறைக்க, 'புதிய ஜனநாயகம்' ஏன் துடிக்க வேண்டும்? பீகாரில் லாலு, அத்வானி யாத்திரையைத் தடுத்து நிறுத்தியது, வி.பி.சிங், ஒப்புதல் பெற்றுத் தானே? ஏதோ வி.பி.சிங்கை கேட்காமல் லாலுவே முடிவு எடுத்தது போல் ஏன் திரித்து எழுத வேண்டும்?

ராஜீவ் ஈழத்துக்கு இந்திய ராணுவத்தை அனுப்பினார் என்றால், ராணுவம் திருப்பி அழைக்கப்பட்டது வி.பி.சிங் பிரதமராக இருந்த போதுதான்; 'இன்னும் கேவலமாக தோற்பதைவிட, நாடு திரும்புவதே மேல்' என்ற முடிவின் பேரில் வி.பி.சிங் திருப்பி அழைத்ததாக அதையும் கொச்சைப்படுத்துகிறது 'புதிய ஜனநாயகம்'.

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் - வி.பி.சிங் - புரட்சிகர மார்க்சிய லெனினியக் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல. ம.க.இ.க.வின் தத்துவார்த்தப் பார்வையில் கூற வேண்டுமானால், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலில் இருந்த ஒருவரே, அந்த அரசியலுக்குள் அதிர்வுகளை நிகழ்த்தியவர் என்பதுதான். அந்த அதிர்வுகளின் தாக்கத்தைக் கவனத்தில் கொள்ளாமல் ஏற்கனவே இருந்த 'சமூக நிலையைக் குலைத்து விட்டாரே' என்று புலம்பும் பார்ப்பனியக் குரலோடு தன்னையும் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தன் பங்கிற்கான 'சேற்றை' பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு வி.பி.சிங் மீது வீசுவது பார்ப்பனிய சார்புப் பார்வை அல்லவா?

'புதிய ஜனநாயகத்தின்' கட்டுரை நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இடஒதுக்கீட்டுக் கொள்கையில் அக் கட்சியின் தெளிவான நிலைப்பாட்டை நாம் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். "இந்து மதத்தின் ஆன்மாவாக இருக்கும் பார்ப்பனியத்தை சாதிய அடுக்குமுறை மற்றும் ஒடுக்குமுறை அமைப்பை எதிர்த்து நமது போராட்டம் இருக்கும்" - என்று 1993-ல் அறிவித்த ம.க.இ.க. ('புரட்சிப் புயல்' - பக்.27, 28) 1998-ம் ஆண்டு கட்சித் திட்டத்துக்கான ஆவணத்தில் அத்திட்டம் காணாமல் போனது ஏன் என்பதும் நமக்குப் புரியவில்லை.

"இன்றைய நிலையில் இந்திய மக்கள் மீது மூன்று மலைகள் - அமெரிக்கத் தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், நிலப் பிரவுத்துவம் ஆகியவை அழுந்திக் கொண்டிருக்கின்றன. இம் மூன்றும் தான் முக்கியமாக இந்திய மக்களின் எதிரிகளாகும்" - (ம.க.இ.க.வின் கட்சித் திட்டம்-1998). - என்று 1998 இல் திட்டத்தை வகுத்துவிட்டார்கள்.

இந்திய மக்களின் அடிப்படை எதிரிகளாக பார்ப்பனர், பார்ப்பனியச் சக்திகள் இல்லை என்பதை கட்சித் திட்டமாக வைத்துக் கொண்டு, அதே பார்வையில் வி.பி.சிங் பற்றிய விமர்சனத்தையும் முன் வைத்துக் கொண்டு ம.க.இ.க. செயல்படுவது நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பவே செய்கிறது.

'கவி'யின் இந்த கட்டுரை 'புதிய ஜனநாயகத்தின்' பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையை சந்தேகப்பட வைத்துவிட்டது!

நன்றி பெரியார் முழக்கம் தபெதிக வார ஏடு பிப்ரவரி 2009

Saturday, February 7, 2009

ம.க.இ.க.வின் புலிவேசம் பாருங்க

ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள்!

என்ற தலைப்பில் வினவு தளத்தில் வெளியான கட்டுரையில் உள்ள முரண்பாடுகள் இங்கே விமர்சிக்கப்படுகிறது.
முதல் பொய்: புலிகளின் பெயரால் நடத்தப்படும் இந்த இன அழிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் செய்தி அனுதினமும் வந்த வண்ணம் இருக்கின்றன.

ம.க.இ.க. இனவாதிகளே உங்களது கோயபல்ஸ் பிரச்சாரத்திற்கு மேற்கண்ட வரிகளே உதாரணமாக திகழ்கிறது. உண்மையை மக்களிடம் மறைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். முதலாளித்துவ கட்சிகள் கூட உங்களிடம் இனிமேல் பிச்சை வாங்க வேண்டும். இலங்கையில் கிழக்கு மாகாணத்திலும், மத்தியில் உள்ள மலையகத் தமிழர்களும், இசுலாமிய தமிழர்களும் பாதுகாப்பாகத்தான் உள்ளனர். இவர்கள் மீது இராணுவ மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. ஏன் மீட்கப்பபட்ட கிளிநொச்சியில் உள்ள மக்கள் கூட பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். அப்படியிருக்கையில் இதனை இனஅழிப்பு என்று கோயபல்ஸ் போல பிரச்சாரம் செய்வதின் நோக்கம் என்ன? கம்யூனிச வேடம் இப்போதுதான் கலைய ஆரம்பித்துள்ளது. போகப் போக புரியும் தமிழ் மக்களுக்கு இதுஒரு இலங்கை ஆதரவு என்.ஜீ.ஓ. என்று.

இரண்டாவது பொய்: இலங்கையிலே கூட சிங்களப் பெரும்பான்மை மக்களின் இனவெறியைத் தூண்டிவிட்டு ஈழத்தமிழனின் இரத்தம் குடிக்கும் இராணுவத்திற்கான ஆதரவை சிங்கள ஆளும்வர்க்கங்கள் பெற்றிருக்கின்றன.

தற்போது இலங்கை அரசின் இராணுவம்தான் புலிகளுக்கு எதிராக மோதல் தொடுத்து வருகிறது. அங்குள்ள சிங்கள மக்களுக்கும் - தமிழ் மக்களுக்கும் எந்தவிதமான மோதலும் நடைபெற்றதாக எந்தச் செய்தியும் வராத நிலையில் இப்படி கயிறு திரித்து தமிழ் இனவாத குளிரில் பிழைப்பு நடத்தலாமா? பெரும்பான்மை சிங்கள மக்கள் சோராம் போயிருந்தால் ஒட்டுமொத்த இலங்கை தமிழ் மக்களும் அல்லவா தற்போது பாதிக்கப்பட்டிருப்பார்கள். அப்படியிருக்கையில் அங்குள்ள யாழ்பாணத் தமிழர்கள் எல்லாம் ஏன் புலிகளிடம் இருந்து தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று போராட வேண்டும். உண்மையை பேசுங்கள் அய்யா!

மூன்றாவது பொய்: புலிகளோ சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவு வேண்டும் என்பதைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டதில்லை. மாறாக அவர்களிடமிருந்து அன்னியப்பட்டே இருக்கிறார்கள்.

அங்கே சிங்கள பேரினவாதம் தூண்டப்பட்டது என்றால் இது சிறுபான்மை தமிழ் இனவாதம். அப்படியிருக்கையில் புலிகள் எப்படி சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவை கோருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள். இது புலிகள் மீதான விமர்சனம் அல்ல. கரிசனம். அதாவத புலிகளை எதிர்கொள்ள முடியாத கோழைத்தனம். தமிழகத்தில் எழுந்துள்ள இனவாத இரைச்சலில் குளிர் காயும் ஓநாய்த்தனம் என்றுதான் இதனை உரைக்க முடியும்.

நான்காவது பொய்: இந்தப் போராட்டத்தில் எல்லா தேசிய இன மக்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இது இல்லை. தமிழன் செத்தால் தமிழன் மட்டும்தான் குரல் கொடுக்க வேண்டுமென்ற அவல நிலை நீடிக்கிறது. இந்தியாவில் கூட மற்ற மாநில மக்கள் ஈழப் பிரச்சினை பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

தமிழ் இனவாதத்தின் அப்பட்டமான - மலிவான - இழிவான குரலின் பிரதிபலிப்பு மேற்கண்ட வரிகள். ம.க.இ.க. சி.பி.ஐ.(எம்-எல்) எஸ்.ஓ.சி. கும்பலின் உண்மை முகம் இதுதான். அதாவது, இந்தியாவின் இதர மொழிவாரிய இன மக்கள் குரல் கொடுக்கவில்லை என்று கவலைப்படுவது தெரிகிறது. அதுசரி ஏதோ நீங்கள் இந்தியா முழுவதும் புரட்சியை கொண்டு வந்து கிழிக்கப் போவதாக ஏமாற்றுகிறீர்களே தமிழகத்தை தாண்டி உங்களுக்கு வேற்று மாநிலங்களில் அமைப்பு இருந்தால் அவர்களை வைத்து போராடியிருக்கலாமா? குரல் கொடுக்க வைத்து இருக்கலாமே? ஏதோ லண்டனில் ம.க.இ.க. இருப்பதுபோல் போஸ்டர் வெளியிட்டு பெருமையடிக்கும் உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் மலையாள, கருநாடக, ஆந்திர உழைக்கும் மக்களைக் கூடவா அணித்திரட்ட முடியவில்லை. அதனால்தான் சொல்கிறோம் உங்களது குழு வெறும் தமிழக அளவில் சீர்குலையை மட்டுமேன முன்னிறுத்தும் குழு என்று. அது மட்டுமா? வெறும் இனவாதக்குழு! இது படிப்படியாக வளர்ந்து சிங்கள இனவாதத்திற்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டும் அளவிற்கு வளர்ந்து விடும். புலிகளுக்கும் உங்களுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. அதனால்தான் உங்களால் மற்ற மாநில மக்களை அணிதிரட்ட முடியலி்லை. புலிகளுக்கு அட்வைஸ் செய்வதற்கு முன்னால் ஒருமுறை உங்கள் முகத்தை பார்த்துக் கொள்வது நல்லது. பாவம் இணையவாதிகளை ரொம்ப நாள் ஏமாற்ற முடியாது. உங்கள்ம முகம் கிழிய ஆரம்பித்துள்ளது.

ஐந்தாவது பொய்: சிங்கள இராணுவம் நடத்தும் இந்தப் போர் இந்தியாவின் ஆதரவோடும், ஆசியோடும், பங்களிப்போடும் நடக்கிறது என்பதுதான் முக்கியம். புலிகளை ஒழிப்பதின் மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு சமாதி கட்டி ஒன்று பட்ட இலங்கையின் பொருளாதாரச் சந்தையை கைப்பற்றுவதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம்.

நீங்கள் வக்காலத்து வாங்கும் புலிகள் பிரேமதாசா அரசாங்கத்தோடு இணைந்து இந்திய அமைதிப்படையை வெளியேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தபோது இந்த சுயநிர்ணய உரிமை எங்கே போனது! புலிகள் ஒன்றும் இலங்கை ஆளும் வர்க்கத்தோடு சமரசம் செய்துக் கொள்ளாதவர்கள் இல்லை என்பதற்கு மேற்கண்ட உதாரணம் மிக முக்கியமானது. அதுசரி! தற்போது தோல்வியின் விளிம்பில் இருக்கும் புலிகளிடம் மாட்டிக் கொண்டுள்ள மக்களை விடுவிப்பது சம்பந்தமாக ஒரு வார்த்தைக்கூட - முனகல்கூட வரமாட்டேங்குதே இது என்ன இலங்கை தமிழ மக்கள் மீது உள்ள பாசமா? அல்லது புலிகள் மீதான கரிசனமா? ம.க.இ.க. செய்யப்போகும் புரட்சி இந்தியாவில் அல்ல என்பது மட்டுமல்ல. செய்ய விரும்புவது இலங்கையில் உள்ள முல்லைத் தீவில் மட்டும்தான் என்பது புரிகிறது.
புலிகளை ஒழிப்பதின் மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு சமாதி கட்டி ஒன்று பட்ட இலங்கையின் பொருளாதாரச் சந்தையை கைப்பற்றுவதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம். என்று சொல்லும் ம.க.இ.க. (சி.பி.ஐ.-எம்)எஸ்.ஓ.சி. தலைமை புலிகளை வெறும் புல்லு தின்னும் புலிகளாக நினைப்பது சூப்பர் காமெடி. அதாவது இவர்கள் நோக்கில் சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் புலிகளால்தான் முடியும்! மற்ற இலங்கைத் தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்குதான் லாயக்கு! ம.க.இ.க.வின் புலிவேசம் பாருங்க இரயாகரன். இனவாதத்தின் உச்ச கட்டத்தில் ம.க.இ.க.

பொய் ஆறு: தமிழ்நாட்டின் ஓட்டுக்கட்சி தலைவர்கள் மத்திய அரசிடம் ஈழத்திற்காக போரை நிறுத்துமாறு பலவீனமான குரலில் வற்புறுத்தினாலும் கூட இந்திய அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை.

தமிழகத்தின் ஓட்டுக் கட்சிகளில் முக்கியமான கட்சியான தி.மு.க. - அதிமுக - சி.பி.எம். - காங்கிரசு போன்றவைகள் புலிகளை ஆதரிக்கவில்லை. மாறாக அங்கு பாதிக்கப்படும் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பை உத்திரவாதம் செய்ய வேண்டும் என்று ஒரே குரலில் நிற்கின்றன. ஆனால் தமிழ் இனவாதம் நடத்தும் சிறு கட்சிகள்தான் இந்த வேடத்தை தற்போது ஏற்று நடத்துகிறத. அதில்கூட தாங்கள்தான் புரட்சிகரமான முன்னிணியில் இருப்பதாக பீத்திக் கொள்கிறது ம.க.இ.க. இனவாதமே உன்பெயர்தான் சந்தர்ப்பவாதமா?

பொய் ஏழு: தமிழ்நாட்டின் உணர்வுப்பூர்வமான பிரச்சினை என்ற அளவில் கூட ஈழப் பிரச்சினை குறித்து இந்திய அரசு கவலைப்படவில்லை.

உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளை அறிவுப் பூர்வமாக அணுக மாட்டோம் என்ற ஒரே புரட்சிகர சீர்குலைவு அமைப்பின் உன்னத குரல் இதுதான். இதைத்தான் இரயாகரன் கேள்வி கேட்டார் இதுவரை அவருக்கு எந்தவிதமான பதிலையும் வினவு அளிக்கவில்லை. சந்திப்பு கேள்வி எழுப்பினால் ம.க.இ.க. இனவாதிகள் தனிநபர் அவதூறுகளை அள்ளித் தெளித்து புளகாங்கிதம் அடைகிறார்கள். கொள்கை குன்றுகளாய் மிளிர்கிறார்கள்.

பொய் எட்டு: இந்தியாவின் ஆதரவு துண்டிக்கப்பட்டால் ராஜபக்க்ஷேவின் திமிர் பெருமளவு அடக்கப்படும்.

இந்தியா கைவிட்டு விட்டால் அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அதாவது இவர்களைப் பொறுத்தவரை அமெரிக்கதான் இலங்கையின் உற்ற நன்பனாக இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறார்களோ என்னவோ? பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நட்பாயிருப்பதால் நமக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களை நாம் அறிவோம்! இவர்கள் புரட்சிகரவாதிகள் அல்லவா? அதன் இப்படியெல்லாம் சிந்தித்து - சீர்தூக்கி வர்க்க ஆராய்ச்சி செய்கிறார்கள்....

பொய் ஒன்பது: வெளிநாட்டில் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் அந்தந்த நாட்டில் இருக்கும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து கொண்டு குறிப்பாக மற்ற தேசிய இன மக்களை அணிதிரட்டி இந்தியாவை அம்பலப்படுத்தும் பணியை செய்ய வேண்டுமென கோருகிறோம்.

பரவாயில்லை இந்தியாவில்தான் ஓட்டுக் கட்சிகள் - பாராளுமன்றம் பன்னித் தொழுவம் என்று கூறி ஜனநாயகம் இல்லை என்று மாரடிக்கும் இந்தக் கூட்டம். வெளிநாட்டில் எல்லாம் சோசலிச ஜனநாயகம் நிலவுவதாகவும் அந்தக் கட்சிகள் எல்லாம் இவர்களைப் போலவே வர்க்கத்தை கடந்து நிற்பதாகவும் கூத்தடிப்பது வேடிக்கையானது. இவர்கள் அணிகள் எல்லாம் இதனைப் படித்து விட்டு புல்லரித்துப் போவார்கள்.

நன்றி தோழர் சந்திப்பு