மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லைப்பாதுகாப்புப்படை, மாநில ஆயுத போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் போதே மேற்குவங்கத்தில் லால்கார் மலைப்பகுதியில் மார்க்சிஸ்ட்டுகளை மாவோயிஸ்ட் என்று கூறிக்கொள்ளும் பயங்கரவாதிகள்
சுட்டுக் கொலை செய்து வருகின்றனர். இந்தியாவில் பல மாநிலங்களில் மாவோயிஸ்ட் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.
வெவ்வேறு பெயர்களில் இயங்கினாலும் இந்த பயங்கரவாதக் குழுக்களுக்குள் ஆயுதப்பரிமாற்றங்கள் உள்ளிட்ட உறவுகளும் தொடர்புகளும் உண்டு. துப்பாக்கி, வெடிகுண்டுகளோடு படுகொலைகளை நிகழ்த்தி வரும் பயங்கரவாதிகளை இந்திய ஆளும் வர்க்கங்களும், அரசும், அவர்களது செய்தி ஊடகங்களும் வெறும் தீவிரவாதிகள் என்றே பிரச்சாரம் செய்கின்றன. பயங்கரவாதம் இங்கு மட்டும் தீவிரவாதமாகவே கருதப்படுகிறது.
1968ம் ஆண்டில் நக்சல் பாரியில் ஆயுதமேந்திய புரட்சியை சாருமஜாம்தார், கனுசன்யால், ஜங்கால் சந்தாஸ் தலைமையில் நடத்தி தனிக்கட்சி தொடங்கினார்கள். நக்சல் பாரிப்புரட்சி நாடெங்கும் பரவுகிறது என்றனர். பின்பு பிரதேச அளவில் பல குழுக்களாய் பிளவுபட்டுப் போனார்கள். ஒன்றையொன்று மறுக்கின்ற குறுங்குழுக்களாய் சிதறிப் போயினர்.
பின்னர் இதில் பலரும் தனிநபர் பயங்கரவாதத்தைக் கைவிட்டதாகக் கூறினர். ஒரு பகுதியினர் தேர்தல் பாதைக்கும் வந்தனர். ஆயுதப் புரட்சிக்கு இது தருணமல்ல என்ற முடிவிலிருந்தே ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினர். இதற்கு நேபாள மாவோயிஸ்ட்டுகளை சிறந்த உதாரணமாய் கூறலாம். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றிய மார்க்சிய நிலைபாடு புரட்சியின் மூலம்தான் என்பது அனைத்து மார்க்சியர்களுக்கும் தெரிந்ததுதான். ஆனால் ஆயுதப் புரட்சியினால் மட்டும் என்பதல்ல. புரட்சி எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் ஆளும் வர்க்கமும் அதன் அரசு இயந்திரமும் மட்டுமே தீர்மானிக்கின்றன. இந்த வடிவம் காலத்திற்குக் காலம், தேசத்திற்கு தேசம் மாறுபடுகிறது. நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட்டுகள் பங்கேற்பது கூட சட்டரீதியான நடைமுறைகளின் மூலம் மக்களைத் திரட்டுவதற்கான முயற்சிதான். சமூக மாற்றத்துக்கான புரட்சியை எந்த ஒரு குறிப்பிட்ட வடிவத்தோடும் வரம்பு கட்டிவிட முடியாது. இதற்கு நக்சலைட்டுகளின் அனுபவமே போதுமானது.
பொதுவாக மாவோயிஸ்ட்டுகள் மலைப்பிரதேசங்களையே தங்கள் வாழிடமாகக் கொண்டுள்ளனர். அரசுகளின் நிழல்படாமல் எந்த வளர்ச்சியுமின்றி பழங்குடி மக்கள் நிராதரவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உணவு, உடை, உறைவிடம், கல்வி போன்ற எந்த அடிப்படைத் தேவைகளும் கிடைக்காத பழங்குடி மக்களிடம் மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கண்ணிவெடிகளோடு ஊடுருவிவிடுகிறார்கள். அரசுகளின் மீதான கோபத்தில் ஒரு பகுதியும், பயத்தினால் ஒரு பகுதியுமாய் பழங்குடிகள் இவர்களிடம் சரணடைகின்றனர். போலீஸ் தாக்குதல்கள் வரும்போது மாவோயிஸ்ட்டுகள் பழங்குடிகளை மனிதக் கேடயங்களாய் பயன்படுத்துகின்றனர்.
ரயில்கள், பாலங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள், மின் உற்பத்தி மையங்கள், பெரும் தொழிற்சாலைகளுக்குக் குண்டு வைக்கிறார்கள். மக்களின் வாழ்விடங்கள், அவர்களது அத்தியாவசியத் தேவைகள், போக்குவரத்து, செய்தித் தொடர்புகள் மீது திட்டமிட்டு குண்டுவீசுகின்றனர். பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றை சீர்குலைத்தால் தொடர்ந்து அப்பகுதி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலேயே நீடிக்கும். தங்கள் பிடியிலுள்ள பழங்குடிப் பகுதிகளையும் இதன்மூலம் தங்கள் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து வைத்துக் கொள்கிறார்கள். பழங்குடி மக்களின் நலன்களுக்காகவே ஆயுதமேந்துகிறோம் என்று அவர்களை நம்ப வைக்கிறார்கள். ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் ஊழல் மலிந்த காவல்துறையைத் தங்களுக்குப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்கள். போதை மருந்துக்கான பயிர் சாகுபடி மலைப்பகுதிகளில் நடைபெறுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கிறது. பணத்தை வைத்து நவீன ஆயுதங்களை அவர்களால் வாங்கிக் குவிக்க முடிகிறது.
வர்க்கப்புரட்சியின் மூலம் வர்க்கங்களை ஒழிப்பது எனும் புரட்சிகர மார்க்சியக் கோட்பாடு, எதிரி வர்க்க உறுப்பினர்களை ஒழிப்பது எனும் தனிநபர் பயங்கரவாதமாய் சீரழிந்து போனது. இப்போது தனது வர்க்க உறுப்பினர்களையே கொல்வது, மார்க்சிஸ்ட்டுகளை கொலை செய்வது என்ற பயங்கரவாதமாய் வளர்ச்சியடைந்துள்ளது. இதைக் கூட மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் ரீதியாகவே சந்திக்க விரும்புகிறது என்று பகிரங்கமாய் கூறியுள்ளது. சந்திக்கும் என்பது உறுதி.
Monday, August 24, 2009
சீரழிந்த நக்சலிசம்
Monday, August 17, 2009
வார்த்தை பொருக்கிகளான இன்டர்நெட் புரட்சியாளர்களும் அவரதம் எழுத்து நடையும் (பகுதி ஒன்று)
அவர்களுக்கு இன்று தமிழகத்திலும், இந்தியாவிலும் முதல் வர்க்க எதிரி மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் தான்.
நந்திகிராமை முடிந்த அளவு அவதூறு செய்ய பயன் படுத்தினார்கள் அதை எதிர்த்து சந்திப்பு, விடுதலை போன்ற வளைத்தளங்களில் பதிலடி கிடைத்தவுடன் அடுத்து காரப்பட்டு விவகாரத்தை கையில் எடுத்து "பொய் பொய்யை தவிர வேறில்லை" என்ற அடிப்படையில் எழுதினார்கள். அதற்கும் சரியான பதிலடி கொடுத்த பின்பு அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர். தற்போது லால்கர் பிரச்சனை. மாவோயிஸ்டுகள் அத்வானி மற்றும் மம்தாவுடன் கொஞ்சி குலாவுவதை இவர்களால் கண்டிக்க முடியாது.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தேவாரம் திருவாசகம் பாட நடந்த போராட்டத்தில் அவர்கள் மட்டுமே போராட்டம் நடத்தியதாய் பொய்யான தகவலை மீண்டும் மீண்டும் உலாவ விடுகின்றனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்களை திரட்டி போராட்டம் நடந்தப்பட்டது. அதில் ஆறுமுகசாமி உள்ளிட்டு ப.ம.க, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சி.பி.ஐ தோழர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர். அதற்கு பின் அங்கு நடந்த பல போராட்டங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவைகள் கலந்துக்கொண்டன. ஆனால் வெட்டி பரபரப்பும் வார்த்தை ஜாலங்களையும் முதலீடாக மற்றி, காவல் துறையுடன் மோதுவது போல சீன் போடும் இவர்கள் தற்போது நடராஜர் ஆலயத்தை விடுவிக்க ஆகப்பெறும் வேலையை தாங்கள் மட்டுமே செய்ததாக மார்தட்டுகின்றனர்.
ஒரு போராட்டட்தில் கலந்துக்கொள்ளும் மற்றவர்களை அங்கீகாரம் செய்யத்தெரியாத அல்லது அவர்களை கேவலப்படுத்தும் பாசிச சிந்தனையின் வெளிப்பாடுதான் இது. தங்களது கட்சியின் பெயரை வெளியே சொல்ல அசிங்கப்பட்டுக் கொண்டு அதாவது த.நா.மா.லெ.க என்ற பெயரை வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு பல்வேறு பெயர்களில் உலாவந்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களது கட்சி திட்டம் எப்படி காலாவதியானது என்று வரி வரியாக சந்திப்பு கிழித்து காயப்போட்ட பிறகு அதற்கும் பதில் சொல்ல தயாரில்லை. ஆனால் இணையதளத்தில் வேலை செய்யும் பல அப்பாவி இளைஞர்களை தங்களது போலி புரட்சிகர வசனங்களால் மூளை சலவை செய்து, வளைதளத்தில் எழுதியே புரட்சியை உண்டாக்கலாம் என்று முயற்சி செய்கின்றனர்.
கருத்துக்களை தூர எரிந்துவிட்டு வார்த்தைகளை தேடித்தேடி பொறுக்கி அவர்கள் எழுதுவது அவர்களுக்கே உரிய கலை. (தலைப்பு இப்போது புரிந்திருக்கும்) உதாரணமாக: "பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்" என்று மாமேதை லெனின் சொன்னதை பயன்படுத்தி மற்ற கட்சிகளை வீராவேசத்துடன் திட்டுவார்கள். ஆனால் "தேவையேற்படும் போது அதையும் கம்யுனிஸ்டுகள் பயன்படுத்த வேண்டும்" என்று அவரின் அடுத்த வரியை மறைத்து அல்லது மறந்து விடுவர். (இப்படி இவர்களது "கட்டிங் பீஸ்" பல உள்ளது தேவையெனில் எழுதுவோம்) ஒரு சம்பவம் குறித்து அவர்களின் பொய் எப்படி பட்ட அடிபடையற்றது என்பது பல முறை நிருபிக்கப்பட்டுள்ளது, வேண்டு மென்றால் இதற்கு பிண்ணூட்டம் அவர்கள் அனுப்பினால் மீண்டும் ஒரு முறை அவர்கள எத்துனை அய்யோக்கியதனமான பொய்யர்கள் என்று மீண்டும் ஒரு முறை நிருபனம் செய்யலாம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை சேர்ப்பதற்கென்றே அவர்கள் ஒரு பிரிவை வைத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அவை சார்ந்த வர்க, வெகுஜன இயக்கங்கள் நடத்தும் மாநாடு பொதுக்கூட்டங்களில் துண்டு பிரசுரத்துடன் நுழைவது வேண்டுமென்றே கலகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதேப்போல் தனிநபர்களை தாக்காமல் அவர்களால் எதையும் எழுத முடியாது. அவர்கள் எழுத்து நடையின் லட்சனம் அதுதான். கேட்டால் பெரிய லட்சிய கொம்பர்கள் போல கதையளப்பார்கள். எத்தனை பேர் அவர்களுக்கு பிண்ணூட்டம் அனுப்பினாலும் அத்தனை பிண்ணூட்டங்களையும் தங்களுக்கு தெரிந்த ஓரிரண்டு நபர்கள் அனுப்புவதாக கற்பனை செய்துக்கொண்டு தனிநபர் தாக்குதலில் இறங்குவார்கள். அவர்களின் நரகல் எழுத்து நடையை படிப்பவர்கள் உடன் கண்டு பிடித்து விடலாம். அவர்கள் அனானி போலவும், புனைப்பெயரிலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் அதை எதிர்த்து எழுதுபவர்கள் அவர்களது முகவரி மற்றும் ஜாதகத்தை வெளியிட வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். என்னே ஒரு ஜனநாயக மான்பு. இப்போது இந்த கட்டுரையின் பின்னுட்டத்தில் எத்துனை நரகல் நடை பதில் வரும் என்று பாருங்கள். ஒன்னு அப்படி வரும் இல்லை எனில் இதை படித்ததாக காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பொய்கள் ஆதாரத்துடன் அடுத்தடுத்து நிருபிக்கப் படும் என்று மேலே உள்ளது அல்லவா.
இன்னும் கூட பல அப்பாவி நண்பர்கள் அவர்களை புரட்சியாளர்கள் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். த.நா.மா.லெ.க வினர் புரட்சிகரமான வார்த்தைகளை பொறுக்குவார்களே அல்லாது எதையும் அவர்களால் களத்தில் நின்று செய்யமுடியாது. இலங்ககை பிரச்சினையில் அவர்கள் ஒருப்பக்கம் தமிழ் என்று கதைப்பார்கள், மறுபக்கம் புலிகளின் ஆதரவு முகம் காட்டுவார்கள், முத்துக்குமரனை வீரனாக சித்தரிப்பார்கள், மற்றொறுபுறம் அந்த அப்பாவி இளைஞனை கேவலப்படுத்துவார்கள், இலங்கை பிரச்சினையில் அவர்கள் நிலை என்ன என்று கண்டு பிடிப்பத்ற்குள் உங்கள் தலைமுடி பாதியாகிவிடும். இவர்கள் தொடர்ந்து அடையாளம் காட்டப்படுவார்கள் இணையதள வாசகர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கூட்டத்தை அடையாள படுத்தவே இந்த பதிவு இங்கு செய்யப்படுகிறது.
எஸ்.ஜி.ரமேஷ்பாபு
Saturday, May 2, 2009
உருப்படாத மகஇக
Thursday, March 26, 2009
பொறுக்கி தின்ன வாய்சவடாலும் எதிர்புரட்சிக்கு மகஇகவும்
நாங்க மாவோவைச் சொன்னாலும்
மகஇக எஸ்.ஓ.சி பின்னால் நின்னாலும்
இலக்கு ஒண்ணுதான் தோழர்.
அரை காலனித்துவ
அரை முதலாளித்துவப்
அரை நிலபிரப்புத்துவப் போதையில்
மூழ்கிக் கிடக்கும் மக்களை
மகஇக கலைக்குழு பாதையிலேயே போய்தான்
அப்படியே புடிக்கணும் !
தோழர் . மக்கள் இன்னும் தயாராய் இல்லை
அது வரைக்கும் ?
ஓட்டு போடாதிங்க!
அப்புறம் பாருங்க.. நேரா புரட்சிதான் !
கேட்டவரை அதிரச்சியடைய
டோட்டலாய் விளக்கினார் தோழர்
யாருமே கட்சியில் இல்லாட்டாலும் - சி.பி.ஐ. மகஇக எஸ்.ஓ.சி
தன் கொள்கையை மட்டும் இழக்காது.
மக்கள் விரோதிகள் எவரும் இனி
(மமதா மாவோஸ்ட் கூட்டுபோல)
மகஇக விலக்கி விட்டு
அரசியல் நடத்த முடியாது !
யாருமே எங்கள ஏதுக்களனாலும் தமிழ்நாட்டுல
இருக்கிற நாலுபேரும் தடுத்தாலும்
சாருமஜீம் தாரு சபதம் முடிக்காமல் மகஇக அடங்காது.
அப்புறம் எப்போது புரட்சி?
அது இருக்கட்டும் தோழரே சி.பி.ஐ. மகஇக எஸ்.ஓ.சி
வரலாற்று ஸ்டேட்டஜியே வேற:
அன்று சாருமஜீம் தாருயை அடையாளம்
கண்டோம் அவரிடம் வந்த
அத்தனைபேரையும் கொன்றோம்.
கம்யுனிஸ்ட் கட்சி உள்ளே இருந்தே
இடது சீரகுலைவை மோப்பம் பிடித்தோம்.
அப்படியே படிப்படியாய்
தனிக்கடையை விரிச்சோம்.
அப்புறமா மேற்கு வங்க நக்சல்பாரி கிராமத்தில்
ஆட்சியைப் பிடிச்சோம்.
அடுத்தது புரட்சி ?
பின்னே ஆயுதம் வன்முறை இல்லாமல்
சோசலிசம் படைக்க முடியாது என்பதை
சாரும் மஜீம்தாரு தலைமையில் அழித்தொழிப்பு என்று சொல்லி
அப்பாவி மக்கள ஏமாத்தி கொண்ணு போட்டோம் !
கல்லாவை வென்றெடுக்க
தனி தனியாக 82 கடை விரிச்யோம்
அமெரிக்காவிடம் நல்ல பேர எடுக்கு
புதுசு புதுச இயக்கம் வைச்சோம்
மகஇக என்.ஜீ.ஓ ஆரம்பிச்சோம் !
காசு சேரத்து கம்யுட்டர வாங்கி
இனையத்தில் சிபிஎம் ஆதிக்கம் ஒழிச்சோம்
சரி புரட்சி எப்போது ?
அட ! மமதாவை வென்றெடுத்தோம்
நந்திகிராமத்தில் நம்ம கட்டுப்பாட்டில் நுழைச்சோம் !
பாட்டாளிவர்க்க ஒற்றுமையைக் காக்க
52 சிபிஎம் தோழர்களை கொண்று போட்டோம்.
பிஜேபினு பேதம் பார்க்காமல்
அத்வானி அரவனைத்துகிட்டோம்.
வர்க்கப் பகைமையை ஒழிக்கத்தான்
சிங்கூர் நந்திகிராமில்
விவசாயி தொழிலாளி வாழ்வை ஒழிச்சோம்
அத்வானிக்கு கொடுத்த உறுதி மொழிப்படி
குஜராத்துக்கு கம்பெனியை மாத்தினோம் !
இதுவா புரட்சி !
இது மட்டுமா ! பாரப்பண ஆதிக்கத்தை ஒழிக்க
பாரப்பண தலைமையை ஏதுக்கிட்டோம்.
இட ஒதுக்கீடு தலித்துகளுக்கும்
பிற்பட்டவர்களுக்கும் கொடுக்க
கூடாதுன்னு புரட்சிக்காக
அந்தப் பிரச்சனையை புதைச்சோம்.
புலிகளை பாசிஸ்ட்டுகள் என்று சொன்னோம்
யாரும் கவணிக்கதால்
புலிகளை ஆதரிச்சி காசு பணமும்
போராட்டத்தின் தலைமையும் பெற்றோம் !
ஈழத்தமிழருக்காய் உயிரகளை எரித்து கசிந்து
பிண வாடை எடுத்த சுடுகாட்டில் அஞ்சாமல்
முன்நின்று வசுலித்த எங்கள் போரத்தந்திரம் சும்மாவா ?
இதிலென்ன புரட்சி ?
அன்ட பிசரண்ட அகிலம் அதிர - எங்கள்
ஆயுத கிடங்கில் புதிய கலாச்சாரத்தில்
புதிய ஜனநாயகத்தில் நாக்குழறி
முத்துக்குமார போன்ற அப்பாவி
இளைஞர்கள் 11 பேரின் படுகொலையில்
எச்சு ஊறி புலிகள் பின்னால் திரளுகையில்
என்ன ஒரு கேள்வி இது !
எத்தனை முறைதான் ஓதுவது !
அடைந்தால் தனி நாடு அடையாவிட்டால்
சுடுகாடு என்று கோசம் போட்ட
தலைவர்களால் முடியாததை
இலங்கை பிரச்சனை
முன்வைத்து தமிழ்நாட்டை தனியாக
பிரிக்கபோகிறோம் ஓட்டுப பொருக்காத
கட்சியா ஆட்சி செய்ய போகிறோம்
நாம இல்லாமல்
யாராவது இனி அரசியல் நடத்த முடியுமா ?
போதும் எப்போதுதான் புரட்சி ?
வந்தது கோபம் தோழருக்கு :
அட ! என்னங்க
இவ்வளவு தூரம் விவரம் சொல்கிறேன்
இன்னும் விளங்காமல்
எங்களிடம் வந்து புரட்சி புரட்சின்னா. ?
சுத்த புரியாத ஆளா நீங்கள் !?
எங்க கட்சி பேரே எங்களுக்கு
தெரியாது கட்சி திட்டமே கிடையாது
ஆனா ஓன்னு ஓட்டுபோடாதே புரட்சி செய்
காலனியம் பேசுவோம்!
ஏகாதிபத்தியம் எதிர்ப்போம்னு
சொல்லுவோம்!
இருந்தாலும் எங்க புரட்சி
குண்டு சட்டிக்குள்ளத்தான்!
அதாங்க எங்க எல்லையெல்லாம்
தமிழ்நாட்டுக்குள்ள மட்டும்தான்
எங்களது அகில இந்திய தலைமையெல்லாம்
தமிழ்நாட்டுக்குள்ள மட்டும்தான்!
அப்புறம் என்ன இருக்கவே இருக்குது
வாய்ச்சவடால் அகில இந்திய புரட்சிய
நடத்திட வேண்டியதுதான்.
பங்காரு அடிகளாரின் சிவப்பு படைக்கு
போட்டியா நாங்க இப்ப
கும்பமேளா நடத்தத் துவங்கிட்டோம்
முதலாளித்துவ பயங்கரவாத
மாநாடு நடத்துவோம்
வரக்கூட்டத்தை அப்படியே
லபக்கென்று பிடித்துக்கொண்டு
இலங்கைக்காக ஒரு ஆர்ப்பாட்டம்
நடத்துவோம்!
அய்யோ இந்தப் புரட்சிக்குத்தான்
இந்தக் கத்தா?
இங்கு சீர்குலைவாளர்கள்தான் புரட்சிக்கு எதிரிகள்
போலிகள் புரட்சி பண்ணவில்லையென்று
பன்னினார்கள் எத்தனையோ
சொல்ல சொல்ல வாய்
வலிக்கும். தேர்தல்
தேதி வந்தவுடன்
தேடி தேடி 8 சிபிஎம் தோழர்களை
கொண்ணுட்டானுங்க.
சிபிஐ எம் எல் எஸ்.ஓ.சி
பேரை கேட்டதால் தான்
என்னவோ புடலங்காய்க்கும்
புரட்சி வந்து முறுக்கிகொண்டதுவோ..
ஆரம்பித்தது வரலாறு அறுபத்தேழிலிருந்து
கூடவே துரோகத்தனத்துக்கும்
கம்யூனிஸ்ட்களை கொன்று குவித்தும்
இன்னமும் அடங்க மறுக்கிறது
குறுதியின் வெப்பம்
கண்காட்டும் தலைவருக்கு
தாசனாகி உழைக்கும் மக்களுக்கு நீசனாகி
மாமா வேலை செய்து செய்து
பாசிஸ்டாக பல்லிளித்து
பார்ப்பன பணியாவிற்கும்
அமெரிக்க ஏஜண்டுகளுக்கும் பாத பூசை
ஆண்டுக்கு ஒருமுறை சிபிஎம் தோழர்கள் படுகொலைபூசை
தேர்தல் தொடங்கியவுடன் ஓட்டுபோடாதே என்று உண்டியல் பூசை.
ஆயிரம் தரகு வேலை
ஆயிரம் பூசைகள் செய்து களைத்து
82 பிரிவாய் பிரிந்துபோய் தெரு
வெறிநாய் போல் அலைந்து திரியும்
நல்லோரே வல்லோரே
உங்களுக்கு மொத்தமாய் பூசை
செய்கிறோம் கூடவே நிரந்தர ஓய்வையும்
இங்கு இடதுசாரிகள் தான் கடவுள்கள்
நாங்கள் எடுக்கிற அவதாரத்தில்
உங்கள் ஆவியும் , அமெரிக்காவும்
உங்கள் திருட்டு வேலையும்,
சீர்குலைவும் காணாமல் போகும்.
Monday, February 16, 2009
புரட்சி நாளை காலை எட்டரை மணிக்கு வருது
நன்றி குழலி
வி.பி. சிங்கை இழிவுபடுத்தும் 'புதிய ஜனநாயகம்'
'மக்கள் கலை இலக்கியக் கழக'த்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழமை சக்தியாகவே கருதுகிறோம். களப் பணிகளில் பல்வேறு சூழல்களில் கரம் கோர்த்து நிற்கும் இயல்பான சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் இரு சக்திகளும் கரம் கோர்த்தே களமிறங்கி வருகின்றன. குறிப்பாக 'இந்து' எதிர்ப்பு; பார்ப்பன எதிர்ப்பு என்ற கோட்பாடுகள் - இரு அணியின் தோழர்களையும் நெருக்கமாக்கியுள்ளன. ஆனாலும்கூட அண்மையில் அவர்களின் 'புதிய ஜனநாயகம்' ஏட்டில் வி.பி.சிங் பற்றி வெளிவந்த ஒருகட்டுரை - 'புதிய ஜனநாயகத்தின்' பார்ப்பன எதிர்ப்புப் பற்றிய பல்வேறு அய்யங்களை எழுப்பியிருப்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.
'காக்கை குயிலாகாது; பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்து மதவெறியர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அக்கட்டுரை, வி.பி.சிங்கைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது. குஜராத் மோடி அளவில் வி.பி.சிங்கைக் கொண்டு வந்து நிறுத்தி, "குற்ற"ப் பட்டியல்களை அடுக்கியிருக்கிறது. பச்சைப் பார்ப்பனியப் பார்வையில் வெளிவந்திருக்கும் அக்கட்டுரை 'துக்ளக் சோ', 'சு.சாமி' கும்பலை நிச்சயமாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கும். 'பொதுவுடைமை கட்சிகளில் மீண்டும் தமது குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது' என்று "அவாள்"கள் கருதினால், அதில் தவறு இல்லை என்பதே நமது கருத்து.
இந்திய அரசியலில் பார்ப்பனர்கள் மற்றும் 'அவாள்' ஊடகங்களின் கடுமையான வெறுப்புக்குரிய மனிதர் தான் வி.பி.சிங். அவரின் மரணம் கூட ஊடகங்களால் 'இருட்டடிப்பு' செய்யப்பட்டன. தங்களின் வஞ்சகத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்; அவரது மறைவையொட்டி சிறப்புக் கட்டுரைகள் எதையும் எந்த பார்ப்பன தேசிய ஏடும் வெளியிடவில்லை. பார்ப்பனர்கள் 'கள்ள மவுனத்தால்' வி.பி.சிங்கை அவமதித்தார்கள் என்றால் 'புதிய ஜனநாயகம்' பததிரிகையோ வெளிப்படையாகவே தமது அவமதிப்புகளைப் பதிவு செய்து, அதில் மகிழ்ச்சி அடைகிறது.
காங்கிரஸ் அரசியலில் பொது வாழ்க்கையைத் தொடங்கிய வி.பி.சிங், பிறகு காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலுக்கு வந்தார் என்பது வரலாறு; தமது சொந்த நிலங்களை 'பூமி தான' இயக்கத்துக்கு வழங்கினார். அமைச்சர் பதவிகளை வகித்தார். ஆனால், வி.பி.சிங்கின் பொது வாழ்க்கை காங்கிரஸ் அரசியலில் முடங்கிக் கிடந்தபோது, காங்கிரஸ் இழைத்த தவறுகளையெல்லாம் பட்டியலிட்டு அதை வி.பி.சிங் மீது சுமத்தி, அவற்றையெல்லாம் எதிர்த்தாரா என்று 'புதிய ஜனநாயகம்' கேள்வி எழுப்புவது - அதன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறதே தவிர, நேர்மையான சமூகப் பார்வையை அல்ல. காங்கிரஸ் அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்காமல், அதன் சுயரூபத்தை அறிந்து வெளியேறி - காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தொடங்கியதுதான் வி.பி.சிங்கின் சிறப்பு.
'இரண்டு அரசியலிலும் எங்களுக்கு உடன்பாடில்லை; நாங்கள் மூன்றாவது அரசியல் அணி' என்பது 'புதிய ஜனநாயகத்தின்' கொள்கையாக இருக்கலாம். அந்தக் கொள்கைக்கு வந்து சேராத எவருமே 'கடைந்தெடுத்த அயோக்கியர்கள்' தான் என்ற நிலைப்பாட்டில் எழுதுவதும் - பேசுவதும் கட்சி வாதமாகத்தான் இருக்க முடியும். லட்சியவாதிகள் - கட்சிவாதிகளாக முழுமையாக மாறி நிற்பது மக்களை அணி திரட்டுவதற்கு - ஒரு போதும் பயன்படாது. அவர்களின் சுயதிருப்திக்குத்தான் தீனி போடும்.
வி.பி.சிங் பிறப்பித்த பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டு ஆணையை சில அரசு பதவிகளுக்கான சலுகைகளாக உண்மையான பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையாளர்கள் எவரும் சுருக்கிப் பார்த்து விட முடியாது. மாறாக இந்திய அரசியலில் அதிரடி மாற்றங்களை உருவாக்கிய நடவடிக்கை அது. பார்ப்பன அரசியல் தலைமையைப் புரட்டிப் போட்டு, பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை அணி திரட்டலுக்கு வழியமைத்து அவர்கள் தேர்தல் அரசியலை நிர்ணயிக்கும் செல்வாக்கு மிக்க சக்திகளாக்கிய மாற்றத்தை அந்த ஆணை தான் கொண்டு வந்தது.
பார்ப்பனர்களுக்கு வி.பி.சிங் மீது எழுந்த கடும் கோபத்துக்கு இதுவே அடிப்படை. பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல, அதுவரை பார்ப்பன மேலாதிக்கம் - சாதியமைப்புகளைக் கவனத்திலே எடுக்காமல், வர்க்கக் கண்ணோட்டத்தில் 'புதிய ஜனநாயக'ப் புரட்சிகளைப் பேசி வந்த பொதுவுடைமை கட்சிகளும், இதனால் நெருக்கடிக்கு உள்ளாயின என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை. தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தத்தை இந்த மனிதன் உருவாக்கி விட்டானே என்ற ஆவேசத்தை - தங்களது அடி உள்ளத்தில் புதைத்து வைத்திருந்தவர்கள்தான் வி.பி.சிங்கை அவர் மறைவிலும் கொச்சைப்படுத்தத் துடிப்பவர்களாக இருக்கிறார்கள். மாறாக, சரியான சமூகப் பார்வைக்கு 'மண்டலாக்கம்' வெளிச்சம் தந்தது என்று கருதுவோர், வி.பி.சிங்கின் பங்களிப்புக்கு ஏற்பு வழங்கி பாராட்டுவார்கள்.
'புதிய ஜனநாயகத்தின்' இந்தக் கட்டுரை மண்டலாக்கத்தால் பதறிப் போன பார்ப்பனர்கள் பக்கம் அது நிற்பதையே உணர்த்துகிறது.
1989 இல் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்த போது, "அதை நாங்கள் எதிர்க்கவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை" என்று எழுதிய 'புதிய ஜனநாயகம்' "மண்டல் குழு பரிந்துரை அமலாக்கமும் எதிர்ப்பும் அரசியல் பயன்களை அடைவதற்காக மேல்சாதிகளுக்கிடையே நடக்கும் மோதல் சண்டை" என்றும் எழுதியது. ('புதிய ஜனநாயகம் - மார்ச், 2003) வி.பி.சிங் நாட்டை சாதிவாரியாகக் கூறு போட்டுவிட்டார் என்று 'அருண்சோரி'களும், 'சோ'க்களும், பார்ப்பனர்களும் ஏதோ, சாதியமைப்பையே வி.பி.சிங் தான் உருவாக்கியது போலக் கூப்பாடு போட்டார்கள். அதே பார்ப்பன குரலைத்தான் 'புதிய ஜனநாயகம்' அன்று இவ்வாறு ஒலித்தது. "நம்புங்கள்; இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதைத் தவிர, நாடு ஒரு உள்நாட்டுப் போரில் மூழ்கிப் போய்விட்டது, சாதிப்போர், மதப்போர், இனப் போராக." (புதிய ஜனநாயகம், அக்.16, 1990)
மண்டல் குழு பரிந்துரையை எதிர்த்து நாடு முழுதும் கலவரத்தை உருவாக்கிய பார்ப்பன சக்திகளைக் கண்டித்து, ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்க வேண்டிய 'புதிய ஜனநாயகம்' அதைச் செய்யவில்லை. மாறாக - இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களையும் சேர்த்தே குற்றவாளியாக்கியது.
"இடஒதுக்கீட்டை ஆதரித்தும் எதிர்த்தும் சாதி அடிப்படையிலும், அயோத்தி விவகாரத்தில் மத அடிப்படையிலும் நடக்கும் கோரக் கொலைகள், வன்முறை வெறியாட்டங்கள் மனசாட்சியுடைய அனைவரையும் வெறுப்பும், அதிருப்தியும் அடைய வைக்கின்றன" என்று எழுதியதோடு "அரசு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மேல்சாதி மேட்டுக் குடியினரிடையே நடக்கும் சாதிச் சண்டைகளை அம்பலப்படுத்தி முறியடிப்போம்" என்று அறைகூவலும் விடுத்தது.
வி.பி.சிங் ஆட்சியின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பார்ப்பன சக்திகள் தொடர்ந்த வழக்கில், பல்வேறு நிபந்தனைகளுடன் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீhப்பளித்தபோது, 'புதிய ஜனநாயகம்' இவ்வாறு எழுதியது. "இடஒதுக்கீடு ஆதரவும் சரி; எதிர்ப்பும் சரி; தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் உட்பட சகல பிரிவு உழைக்கும் மக்களையும் அடக்கி ஒடுக்கிச் சுரண்டும் தரகு அதிகார முதலாளிகள், நிலப் பிரபுக்களுக்குச் சேவை செய்யும் அரசு எந்திரத்தில் பதவி - இடம் பிடிப்பதற்கான போட்டா போட்டியும் - நாய்ச் சண்டையும் தான் இந்த அப்பட்டமான உண்மை இப்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று எழுதியது ('புதிய ஜனநாயகம் 1993 - செப். 16-31, அக் 1-15)
ம.க.இ.க.வின் அரசியல் அமைப்பான இந்தியப் பொதுவுடைமை கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) அதிகாரப்பூர்வ ஏடான "புரட்சிப் புயல்", "இடஒதுக்கீடு கொள்கை மக்கள் சாதிகளாகப் பிரிந்திருப்பதை சாசுவதமாக்குகிறது" என்று எழுதி, பார்ப்பனர்களின் நிலைப்பாட்டையே தனது கொள்கை என்று அறிவித்திருந்தது. ('புரட்சிப் புயல்' - 1985 டிசம்பர்)
"ஒரு அரசியல் தலைவரை - எந்த வர்க்கத்துக்கு சேவை செய்தார் என மதிப்பீடு செய்யாமல், தனி மனிதப் பண்புகளையும், ஒரு சில சீர்திருத்த அறிவிப்புகளையும் மட்டும் வைத்து மதிப்பீடு செய்து, துதிப்பாடி போற்றுவது என்பது இன்னொரு மோசடியே" என்று, எழுதும் 'புதிய ஜனநாயக'த்தைப் பார்த்து, நாம் கேட்க விரும்புவதெல்லாம் இதுதான். அரசியல் தலைவருக்கு பொருந்தக்கூடிய இலக்கணம் அரசியல் கட்சிக்கும் பொருந்தக் கூடியது தானே; அப்படியானால் 'புதிய ஜனநாயகம்' இடஒதுக்கீட்டில் மேற்கொண்ட நிலைப்பாடு எந்த வர்க்கத்துக்கு சேவை செய்வதாகும் என்ற கேள்வியைத்தான் நாம் திருப்பிக் கேட்க விரும்புகிறோம். இடஒதுக்கீட்டில் கண்டிப்பான எதிர்நிலை எடுத்திருந்த புரட்சிகரக் குழுக்களை எல்லாம் வி.பி.சிங்கின் ஆணை நெருக்கடிக்குள்ளாக்கி விட்டதன் சீற்றத்தை 'புதிய ஜனநாயக'த்தின் கட்டுரையிலும் பார்க்கிறோம்.
போபர்சு பீரங்கி ஊழலில் ராஜீவ்காந்தியோடு சமரசம் செய்து கொள்ள மறுத்ததால் காங்கிரசை விட்டு வெளியேறினார் வி.பி.சிங் என்ற உண்மையை 'புதிய ஜனநாயகம்' மறைத்து - "கறைபடாதவர் என போற்றப்படும் இவர் போபோர்சு பீரங்கி விவகாரத்தில் வெளியேறி ஜனமோர்ச்சா எனும் கட்சியை உருவாக்கினார்" என்று எழுதுகிறது. கறைபடாதவராக இருந்த காரணத்தினால் தானே வெளியேறினார்?
போபோர்ஸ் ஊழலை அதிகாரத்தைப் பயன்படுத்தி மூடி மறைக்க முயன்றார் ராஜீவ். வி.பி.சிங் அதிகாரத்துக்கு வந்த பிறகு தான் பல தடைகளைக் கடந்து 'முதல் தகவல் அறிக்கையே' பதிவு செய்யும் நிலை உருவானது என்பதை எல்லாம் மறைத்து, குற்றவாளி ராஜீவ் கும்பலை தண்டிக்கவோ, விசாரிக்கவோ இல்லை என்று எழுதுவது பொறுப்புள்ள விமர்சனமாகுமா? 27 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து, வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ராமன் ரதயாத்திரையைத் தொடங்கினார் அத்வானி. பீகாரில் யாத்திரை தடை செய்யப்பட்ட நிலையில், வி.பி.சிங் ஆட்சிக்கு பா.ஜ.க. ஆதரவைத் திரும்பப் பெற்ற வரலாறுகளையெல்லாம் மறைக்க, 'புதிய ஜனநாயகம்' ஏன் துடிக்க வேண்டும்? பீகாரில் லாலு, அத்வானி யாத்திரையைத் தடுத்து நிறுத்தியது, வி.பி.சிங், ஒப்புதல் பெற்றுத் தானே? ஏதோ வி.பி.சிங்கை கேட்காமல் லாலுவே முடிவு எடுத்தது போல் ஏன் திரித்து எழுத வேண்டும்?
ராஜீவ் ஈழத்துக்கு இந்திய ராணுவத்தை அனுப்பினார் என்றால், ராணுவம் திருப்பி அழைக்கப்பட்டது வி.பி.சிங் பிரதமராக இருந்த போதுதான்; 'இன்னும் கேவலமாக தோற்பதைவிட, நாடு திரும்புவதே மேல்' என்ற முடிவின் பேரில் வி.பி.சிங் திருப்பி அழைத்ததாக அதையும் கொச்சைப்படுத்துகிறது 'புதிய ஜனநாயகம்'.
ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் - வி.பி.சிங் - புரட்சிகர மார்க்சிய லெனினியக் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல. ம.க.இ.க.வின் தத்துவார்த்தப் பார்வையில் கூற வேண்டுமானால், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலில் இருந்த ஒருவரே, அந்த அரசியலுக்குள் அதிர்வுகளை நிகழ்த்தியவர் என்பதுதான். அந்த அதிர்வுகளின் தாக்கத்தைக் கவனத்தில் கொள்ளாமல் ஏற்கனவே இருந்த 'சமூக நிலையைக் குலைத்து விட்டாரே' என்று புலம்பும் பார்ப்பனியக் குரலோடு தன்னையும் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தன் பங்கிற்கான 'சேற்றை' பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு வி.பி.சிங் மீது வீசுவது பார்ப்பனிய சார்புப் பார்வை அல்லவா?
'புதிய ஜனநாயகத்தின்' கட்டுரை நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இடஒதுக்கீட்டுக் கொள்கையில் அக் கட்சியின் தெளிவான நிலைப்பாட்டை நாம் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். "இந்து மதத்தின் ஆன்மாவாக இருக்கும் பார்ப்பனியத்தை சாதிய அடுக்குமுறை மற்றும் ஒடுக்குமுறை அமைப்பை எதிர்த்து நமது போராட்டம் இருக்கும்" - என்று 1993-ல் அறிவித்த ம.க.இ.க. ('புரட்சிப் புயல்' - பக்.27, 28) 1998-ம் ஆண்டு கட்சித் திட்டத்துக்கான ஆவணத்தில் அத்திட்டம் காணாமல் போனது ஏன் என்பதும் நமக்குப் புரியவில்லை.
"இன்றைய நிலையில் இந்திய மக்கள் மீது மூன்று மலைகள் - அமெரிக்கத் தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், நிலப் பிரவுத்துவம் ஆகியவை அழுந்திக் கொண்டிருக்கின்றன. இம் மூன்றும் தான் முக்கியமாக இந்திய மக்களின் எதிரிகளாகும்" - (ம.க.இ.க.வின் கட்சித் திட்டம்-1998). - என்று 1998 இல் திட்டத்தை வகுத்துவிட்டார்கள்.
இந்திய மக்களின் அடிப்படை எதிரிகளாக பார்ப்பனர், பார்ப்பனியச் சக்திகள் இல்லை என்பதை கட்சித் திட்டமாக வைத்துக் கொண்டு, அதே பார்வையில் வி.பி.சிங் பற்றிய விமர்சனத்தையும் முன் வைத்துக் கொண்டு ம.க.இ.க. செயல்படுவது நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பவே செய்கிறது.
'கவி'யின் இந்த கட்டுரை 'புதிய ஜனநாயகத்தின்' பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையை சந்தேகப்பட வைத்துவிட்டது!
நன்றி பெரியார் முழக்கம் தபெதிக வார ஏடு பிப்ரவரி 2009